பயணக்கட்டுரை -1 இல் பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படை ஆலயத்திற்கு சென்று வந்த எங்களின் பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டேன். இந்த பதிவில் உலகை ஓர் குடையின் கீழ் ஆண்ட நமது பாசத்திற்குரிய மன்னன் , வீர வேங்கை, சுந்தர சோழனின் அன்பு புதல்வன், தமிழ் குலத்தின் முதல்வன், தமிழனின் கட்டிடக்கலையை உலகம் பார்த்து வியக்க செய்த பொறியியல் வித்தகன், அருள்மொழி என்ற ராஜ ராஜ சோழனின் சமாதி சென்று வந்த அனுபவமே இந்த பயணக்கட்டுரை.
பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை ஆலயத்தை தரிசித்து விட்டு கிளம்பும் வேளையில், நண்பர் விஜயகரன் பஞ்சவன் மாதேவி கோவிலை பராமரிக்கும் ஐயப்பனிடம் உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி இங்கிருத்து எத்தனை தூரம் என்று கேட்டார். ஐயப்பன், இங்கிருந்து வெறும் 4 கி மீ தூரமே உள்ளது என்று கூறிவிட்டு, அந்த சமாதியின் இன்றைய நிலை பற்றி நம்மிடம் வருத்தப்பட்டார். உலகை ஆண்ட அந்த ஒப்பற்ற மன்னன் சமாதியின் இன்றைய நிலை கண்டு நெஞ்சம் பொறுக்குதில்லை. நேற்று முளைத்த சில தலைவர்களுக்கும், சாதிய சிந்தனையை வளர்த்தவர்களுக்கும், நடிகர்களுக்கும் சாலையின் மையத்தில் வெண்கல சிலை, தங்க சிலை ! ஒன்றுமே செய்யாத இன்றைய விளம்பர அரசியல்வாதிகளுக்கும், தலைவர்களுக்கும் அரசு செலவு செய்து சிலை வைக்கும் பொழுது, உலகை ஆண்ட ஒப்பற்ற மன்னனின் சமாதியை இப்படி கேட்பாரற்று கிடக்கும் நிலையில் வைத்திருப்பது கொடுமை என்றார். ஞாயமான கேள்வி தான். பின்னர் அவரிடம் விடைபெற்று கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
செல்லும் வழியெங்கும் சோழர்காலத்துக்கு வித்துகள். வழியெங்கும் நாம் கதைகளிலும் நாவல்களிலும் படித்த ஊர்களின் பெயர்கள். அவை பம்பை படையூர், ஆரிய படையூர். இந்த இரண்டு ஊர்களும் சோழர்காலத்தில் படைகளுக்கு போர் பயற்சி அளிக்கும் ஊர்கள். அந்த ஊர்களை கடந்து செல்லும் பொழுது அந்த அழகான பெயரை பார்த்து மெய் சிலிர்த்தோம் அட டா !! எந்த இடத்திற்கு நாம் வந்து உள்ளோம் ? எந்த ஊரில் நாம் இருகின்றோம்?, என்று ஒரு வார்த்தையில் விவரிக்க முடியாத சந்தோசம். அந்த ஊரின் பெயர் வேறொன்றும் அல்ல. நமது அன்புக்குரிய குந்தவை மற்றும் அருள்மொழி வர்மர் பிறந்த இடம் தான் “பழையாறை”. இந்த பெயரில் அப்படி என்ன ஒரு மந்திரம் ? ஏன் இந்த பூரிப்பு ? என்று சிந்தித்தால், பொன்னியின் செல்வனில் கல்கியும் உடையாரில் பாலகுமாரனும் எப்படியெல்லாமோ வர்ணித்து, இந்த பெயரை கேட்டாலே புல்லரிக்கும் ஓர் உணர்வை நமக்குள் விதைத்து விட்டார்கள். சோழர் வரலாறு படித்த அனைவருமே குந்தவை, ராஜ ராஜ சோழன் இருவரையும் தமிழ் குலத்தில் வாழ்ந்த இந்த மண்ணின் தெய்வமாகவே நினைக்க தொடங்கிவிட்டோம். அதனால் வந்த உணர்வு தான், பழையாறை என்ற பெயரை பார்த்தவுடன் வந்த பூரிப்பு …
அதே பூரிப்போடு அந்த பகுதியை கடந்தோம் ,சிறிது துரத்தில் ஒரு மொட்டை கோபுரத்தில் ஒரு கோவில். அதன் பெயர் சோமநாத சாமி கோவில். இதன் வயது 1300ஆண்டுகள் என்பதை கேட்டறிந்தோம். மிகவும் பசுமையான இடம். ஆனால் முறையான பராமரிப்பு இல்லை.
மீண்டும் சோழனை காண அங்கிருத்து புறப்பட்டோம். உடையாளூர் எங்களை இன்முகத்தோடு வரவேற்றது .
நாங்கள் போக வேண்டிய இடத்தை கிட்ட தட்ட நெருங்கிவிட்டோம். நாங்கள் சென்று கொண்டு இருந்த தார் சாலையின் இடது பக்கம் ஒரு பதாகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் ராஜ ராஜ சோழன் சமாதி செல்லும் வழி என்றும் ராஜ ராஜ சோழனை பற்றிய சிறிய குறிப்பும் உள்ளது.
வண்டியை நிறுத்துவிட்டு இறங்கி நடந்தோம். அப்பொழுது தான் தெரிந்தது அந்த ஊரின் பெயர் சிவபாதசேகர மங்களம் என்று. சிவபாதசேகரன் என்பது நமது மாமன்னன் ராஜ ராஜ சோழனின் இன்னொரு பெயர் என்பது நாம் அறிந்ததே. இறங்கி சமாதி இருக்கும் இடம் என்று சொல்லப்படும் இடத்தை நோக்கி நடந்தோம் உடம்பெல்லாம் ஒரே பூரிப்பு. மனதில் அளவு கடந்த இன்பம். சொல்ல முடியாத துன்பம். ஒரே நேரத்தில் இன்பமும் துன்மும் கலந்து எங்களை ஆட்கொண்டது. அந்த உணர்வை சொல்லவும் முடியவில்லை. சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. சொல்ல முற்பட்டாலும் சொல்ல முடியாமல் வார்த்தை இன்றி தவிக்கின்றேன். இது சோழன் வாழ்ந்த இடம். அவர் பாதம் பட்ட புண்ணிய பூமி. இங்கே நம் பாதம் பட நமக்கு தகுதி உள்ளதா??? என்ற எண்ணமே எங்களின் எல்லோர் மனதிலும் குடிகொண்டது.
இறுதியாக அந்த இடத்தை அடைந்தோம். அந்த பகுதியை பார்த்தவுடன் நான் அன்று இருந்த நிலையை இன்று எண்ணி பார்க்கும்பொழுது பாலகுமாரன் ஐயா உடையார் 6வது பாகத்தின் முன்னுரையில் குறிப்பிட்ட வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. உடையார் நாவலை முடித்தவுடன் அவர் இருந்த நிலையை குறிப்பிடும் பொழுது, ” நெஞ்சு முழுவதும் ஒரு விம்மிதம் பரவிக் கிடக்கிறது. எந்த நினைப்புமற்று, எந்த செயலுமற்று, எந்த அசைவுமற்று வெறுமே கிடக்கின்ற நிலையை சில கணங்கள் உள்ளே உண்டாயிற்று ” என்பார். கிட்ட தட்ட அதே போன்றதொரு நிலையைத் தான் நான் சமாதி இருப்பதாக சொல்லப்படும் இடத்தை நுழையும் பொழுது உணர்ந்தேன்.
உள்ளே நடக்க கால்கள் தடுமாறின. கைகள் நடுங்கின, “சோழம் சோழம் சோழம்” என்று வாய்விட்டு உலகமே அதிர கத்த வேண்டும் போல இருந்தது. ராஜ ராஜ சோழன் சமாதி மேல் இருக்கும் லிங்கத்தை கட்டி அணைத்து அழ வேண்டும் போல் இருந்தது. அடே அற்ப மானிடா ! அத்தனை பிரமாண்டமான பெரியகோவிலை கட்டி, இது தன்னால் நடந்தது அல்ல என்று தலைக்கனம் இல்லாமல் இருந்தவன், “நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும் கொடுப்பார் கொடுத்தனவும் இக்கல்லிலே வெட்டி அருளுக ” என்று பெருந்தன்மையுடனும் தன்னடக்கத்துடன் சொன்ன இம்மண்ணில் வாழ்ந்த மனித தெய்வம் உறங்குவதாக சொல்லும் இடமடா. இங்கே உன் கால் படலாமா??? என்று என் கால்கள் நடக்காமல் பின்னிகொண்டன. அந்த லிங்கத்தை தொட்டுக்கொண்டே சிறிது நேரம் மண்டியிட்டு அமர்ந்துவிட்டேன்.
பின்னர் ஒரு 90 வயதை கடந்த ஒரு முதியவர் வந்தார். அங்கே சூடம் ஏற்றி காட்டினார். அந்த இடம் அவருக்கு சொந்தமான இடம். அவர் குடும்பமே சேர்ந்து அங்கே தினமும் பூசை செய்து வருகின்றனர். அந்த முதியவருக்கு முதுகு வளைந்து நடக்கவும் முடியவில்லை. கற்பூர தட்டை நிலையாக பிடிக்க கூட முடியவில்லை. அந்த தள்ளாத முதுமையிலும் தளராமல், இது என் மன்னனுக்கு நான் செய்யும் சேவை என்று செய்து வருகிறார்,எந்த லாப நோக்கும் இல்லாமல்.
அங்கே வந்த எங்களுக்கு அவர் கல்கண்டு கொடுத்தார். கொடுத்துவிட்டு எதோ என்னால் முடிந்தது, நமது பேரரசரை காண வருபவர்களுக்கு எதாவது கொடுக்கவேண்டும். சும்மா அனுப்பக் கூடாது. அதனால் என் வசதிக்கு என்னால் முடிந்ததை தருகிறேன் என்றார். நாங்கள், “நம் தமிழ் மன்னனுக்காக நீங்கள் செய்யும் சேவை மிகப்பெரியது. இது நமது ராஜ ராஜ சோழன் வழங்குவது. இதற்கு விலைமதிப்பே இல்லை” என்று சொல்லி அந்த கல்கண்டை உண்டோம்..
பிறகு அவர் அங்கு எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் எங்களின் பெயர், தொலைபேசி, முகவரியை எழுத சொன்னார். எழுதி கொடுத்தோம். பிறகு அவரிடம் அந்த சமாதியை பற்றிய தவல்களை நாம் கேட்டோம். அவர் சொன்ன விடயங்கள்… அப்பப்பா ! நமக்கு பெரும் வியப்பை தந்தது. அது என்னவென்பதை பற்றியும், இது ராஜ ராஜ சோழன் சமாதி தானா ??? அதற்கு என்ன ஆதாரங்கள் ???? நிருபிக்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பதைப் பற்றியும் அடுத்த பதிவில் காண்போம்
-கணேஷ் அன்பு
இடம் என்று சொல்லப்படும் இடத்தை நோக்கி நடந்தோம் உடம்பெல்லாம் ஒரே பூரிப்பு. மனதில் அளவு கடந்த இன்பம். சொல்ல முடியாத துன்பம். ///true
நானே நேரில் சென்று பார்த்து வந்தது போல் தோன்றுகிறது. படங்களே கதை சொல்கின்றன.தங்களுடைய எழுத்துகள் அதை மேலும் விவரிக்கின்றன. என் வாழ் நாள் முடிவதற்குள் நானும் அப்புனித பூமியில் ஒரு கணமேனும் நின்று மகிழ வேண்டும் என்ற அவா உங்கள் கட்டுரையை படித்த பிறகு நிலை பெற்றுள்ளது. குந்தவையும் பொன்னியின் செல்வனும் நம் அனைவரின் மனதிலும் தெய்வங்களாகவே வாழ்கின்றனர். அதற்கு தங்கள் கட்டுரையே ஒரு சான்று."“சோழம் சோழம் சோழம்” என்று வாய்விட்டு உலகமே அதிர கத்த வேண்டும் போல இருந்தது" இவ்வரிகள் மனதின் ஆழம் வரை சென்று பாதிக்கின்றது. சோழனை நேசித்த ஒவ்வொரு மனிதனும் இவ்வரிகளுக்கு என்னை போலவே கண்ணீர் விடுவர். அடுத்த பதிவிற்கான ஆவல் மேலும் அதிகரிக்கின்றது. விரைவில் பதியவும்.
உங்களின் கருத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தருகிறது மிக்க நன்றி தோழி, விரைவில் அடுத்த பகுதி
மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா
தகவல்களுக்கு கோடி நன்றிகள்.நாகப்பட்டிணத்திலும் உங்கள் பயணத்தை தொடருங்கள். திருவாருர் மற்றும் நாகையில் நம் சோழர்கள் விட்டுச்சென்ற சுவடுகளை பதிவு செய்து எங்களிடம் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன் .
முன்பு எழுதிய கட்டுரையை விட இக்கட்டுரை மிகவும் அருமை. இரண்டு மூன்று இடங்களில் கண்ணீர் வந்து விட்டது…. உன் கட்டுரையை படித்து விட்டு நானும் தூய தமிழுக்கு மாறிவிட்டேன் பார்த்தாயா? 🙂 'அந்த முதியவர் கற்பூர தட்டை பிடிக்க கூட முடியவில்லை' என்ற இடம் உண்மையிலேயே வலிக்கின்ற இடம். இந்த கட்டுரையை படிக்கும் பொழுது எனக்கு "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி" பாட்டு தான் ஞாபகம் வருகின்றது. நம் தமிழ் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எது நம் தமிழ் இனத்திற்கு பெருமையோ அதை கண்டு கொள்ளவே இல்லை. இது மிகவும் வேதனையான விஷயம் தான். ஆனால் நீயும் உன் நண்பர்களும் செய்யும் பணி அபாரம். இப்பொழுது உள்ள தொழில்நுட்பங்கள் மூலமாக நீ அதை உன் தோழர்களிடம் கட்டுரை வாயிலாக கொண்டு செல்லும் விதம் அருமை. உன் கட்டுரை கண்டு இன்னும் நிறைய தோழர்கள் அவ்விடம் சென்று தொழுது அக்கோவிலை உயிர்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும். விரைவில் அக்காலமும் வரும் என்ற நம்பிக்கை உன் கட்டுரைகளை படிக்க படிக்க எனக்கு வருகிறது. உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அப்பாவுடைய கவிதை புத்தகம்? அதில் குரிபிடிருந்த வரிகள் உன்னை பற்றி? "டிசம்பரில் பூத்த பூவே" என உன்னை பற்றிய கவிதை தொடங்கும் அல்லவா? அதில் குரிபிடிருந்த வார்த்தைகள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. "ஒரு போர்த்தலைவனை போல் நீ எல்லோரையும் வழி நடத்தி செல்வாய். அந்த தைரியம் துணிச்சல் தன்னம்பிக்கை எல்லாம் உன்னிடம் இருக்கிறது என்று" உனது இந்த செய்கைகளும் பதிவுகளும் எனக்கு அந்த கவிதையை ஞாபக படுத்துகிறது. கண்டிப்பாக அதே போல் இன்றைய இளைய தலைமுறையினரை தமிழும் தமிழ் வரலாரினையும் நோக்கி நடத்தி செல்வாய்…. அப்பா சொன்ன வாக்கை மெய் ஆக்குவாய் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய வந்து விட்டது. வாழ்த்துகள் :-)…
உன்னுடைய கருத்து எனக்கு மிகவும் உற்சாகம் தருகிறது, உண்மைதான் உன் தமிழில் நல்ல முனேற்றம் சென்ற பதிவிற்கு நீ போட்டிருந்த கருத்தில் ஏகப்பட்ட எழுத்து பிழை இபொழுது அது வெகுவாக குறைந்து தேர்ந்த எழுத்தாளர் போல் தமிழ் வார்த்தைகள் உள்ளது வாழ்த்துக்கள் ரம்யா, அப்பா என்னை பற்றி எழுதிய கவிதையை இன்றும் நீ மறக்காமல் இருப்பது உன் அன்பையும் நட்பின் ஆழத்தையும் காட்டுகிறது. உன் கருத்துக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. அவசியம் அடுத்த விடுமுறையில் சோழர் தடம் தேடி நாகை, திருவாரூர் சென்று அவற்றை பற்றியும் உங்களோடு பகிர்கின்றேன்
மெய் மறந்தேன் என்பதின் அர்த்தம் இன்று தான் புரிந்தது எனக்கு…மாம்பழம் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய நான் இறங்கியது கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில்…பயணம் செய்தது ரயிலில் இல்லை இந்த கட்டுரையில்…மிக அருமையான உணர்வு …அடுத்த பதிவை விரைவில் பதியவும்..
நீங்கள் மெய் மறந்ததிற்கு காரணம் ராஜ ராஜ சோழன் நானோ என் எழுத்தோ அல்ல, நமது வீர சோழனை பற்றி யார் எழுதினாலும் அதை நாம் படிக்கும் பொழுது நமக்கு இதே உணர்வு வரும்,உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி விரைவில் அடுத்த பகுதியை பகிர முயற்சி செய்கின்றேன்
அருமை ,கணேஷ்…..கண்கள் பணித்தது பதிவு கண்டு….என்னை பொறுத்தவரை அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான்…நம்மில் வாழ்கிறான்…அவன் உறங்கும் இடம் கண்டு மனம் பதறுது….ஏனோ மனம் அவன் மரணத்தை ஏற்க மறுக்கிறது….
//நெஞ்சு முழுவதும் ஒரு விம்மிதம் பரவிக் கிடக்கிறது. எந்த நினைப்புமற்று, எந்த செயலுமற்று, எந்த அசைவுமற்று வெறுமே கிடக்கின்ற நிலையை சில கணங்கள் உள்ளே உண்டாயிற்று//
ஒவ்வொரு முறை பொன்னியின் செல்வன் படிக்கையிலும் இதே போன்றதோர் உணர்வை நானும் அடைந்துள்ளேன்….இந்த மண்ணின் மகள் என்பதில் எனக்கு நிறையவே அகந்தை உண்டு…..என் மண்ணின் சக மைந்தர்கள் தொடரும் பணி இன்னும் நிறைய தூரம் சிறப்பா போகணும் ..வாழ்த்துக்கள்…:)
மிக்க நன்றி, பார்த்த பொழுது எனக்கு வந்த அதே உணர்ச்சி நீங்கள் படிக்கும் பொழுதும் உணர்த்து கண்டு மிக்க மகிழ்ச்சி, இது ராஜ ராஜ சோழன் மேல் உங்களுக்கு இருக்கும் அதித காதலினால் தான் இந்த கண்ணீர் வந்து உள்ளது என்று நினைகின்றேன்,உங்கள் கருத்துக்கு நன்றி எங்கள் பயணம் கண்டிப்பாக தொடரும் நன்றி
மிக்க நண்றி மிகவும அருமையாதகவலைத்தந்தீர்கள் மீண்டும் ஒருமுறை நண்றி உங்கள்
பயணம் தொடர எனது வாழ்த்துகள்
அண்ணா கட்டுறை அருமை..!! உணர்வுகளை அப்படியே பதிவு செய்திருக்கீங்க.. உடையார் , பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை படித்தவர்களாலும், பழையாறை பகுதிகளை நேரில் கண்டவர்களால் மட்டுமே உணர முடியும் அந்த 'நெகிழ்ச்சியை', எழுத்து வடிவில் அணைவரும் உணரும் வண்ணம் படைத்துள்ளது பாராட்டுதலுக்கு உரியது…
"“சோழம் சோழம் சோழம்” என்று வாய்விட்டு உலகமே அதிர கத்த வேண்டும் போல இருந்தது" இந்த வரிகளை படித்த போது மெய் சிலிர்த்தது..!!♥♥
உங்கள் கருத்துக்கு நன்றி
உன் கருத்துக்கு மிக்க நன்றி தம்பி 🙂
"ராஜ ராஜ சோழன் சமாதி மேல் இருக்கும் லிங்கத்தை கட்டி அணைத்து அழ வேண்டும் போல் இருந்தது. அடே அற்ப மானிடா ! அத்தனை பிரமாண்டமான பெரியகோவிலை கட்டி, இது தன்னால் நடந்தது அல்ல என்று தலைக்கனம் இல்லாமல் இருந்தவன், " இந்த வரிகள் உணர்வு நானும் உனக்குள் இருக்கிறேன் என்று உயிர்க்கு அறிமுக படுத்திய வரிகள் சிலிர்த்து போனேன் அருமை மிக அருமை தோழரே………பயணம் தொடர வாழ்த்துக்கள்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே
அற்புதமான எழுத்துக்கள்.
உடையாளூர் சென்றோம் என்று நீங்கள் சொன்ன போது, அந்த வாய்ப்பை நான் நழுவ விட்டேனே என்று நொந்தேன். ஆனால், உங்களின் இந்தப் பயணக் கட்டுரை என்னை பூரிப்பு அடைய வைத்துள்ளது. நான் உங்களோடு வராத குறையை நிவர்த்தி செய்து விட்டது. உங்களோடு நானும் பயணித்த அனுபவம். உங்கள் வர்ணனையை அணு அணுவாக ரசித்தேன். உங்கள் கட்டுரையை படித்த பின்பு, உடையாளூர் சென்று அமைதியாக உறங்கி கொண்டு இருக்கும் ராஜ ராஜனை தரிசிக்க மேலும் ஆவல் கூடுகிறது. உங்கள் எழுத்துக்களின் தாக்கம் அபாரம்.
நீங்கள் இவ்வாறு நிராகரிக்கப் பட்ட மேலும் பல இடங்களுக்கு பயணம் செய்து, மக்கள் மறந்து விட்ட, மக்கள் மனதில் மறைந்து விட்ட செய்திகளை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். உங்கள் எழுத்துக்களின் மூலம் எங்களை எல்லாம் சிறிது நேரம் மெய் மறக்கச் செய்த உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள். நன்றி Ganesh Anbu
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி, நீங்கள் மெய்மறந்ததற்கு காரணம் என் எழுத்து அல்ல ராஜ ராஜ சோழன் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு, எங்களின் இந்த தேடல் தொடரும், அனுபவ கட்டுரையும் உங்களை வந்து அடையும்……..நன்றி
Ponniyin selvan Padilla sollungal ungal pillaikalai Kali nanri
Ennal kannitai Adaka mudiyavilai vazhga rajarajan
Ganesh Anbu இது தான் என்னிலும் தோன்றியது. முதல் முறையாக ராஜா ராஜா சோ ழரின் சமாதியை பார்த்ததிலிருந்து சிறுக சிறுக இந்த சமாதியை கட்டுவதற்காக சேமிக்கிறேன்..இன்னும் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை
en peyaraik kurippida en uruvam onrum seidhuvidavillai, manidhan raja raja solan enakku nanbanu millai,uravinanumillai ean annayumillai en thandhayumillai, irundhum udalaal irandhavanai enni, manadhaal pirandhadhumudhal varundhikkondu irukkiren, en uyiraanavanai eppodhu indha vetru udalaal thottup parkkap pogireno, arulmozhi varmane,agilam aanda raja raja solane unnai patri ninaikkayil en kanneer mattume pesudhada. arumai nanbare thiru ganesh anbu avangale, naam tamilaal inaivom, manadhaal seyalbaduvom, ungal muyarchchi ulagam arindha raja raja solanai inru marandha tamilinam ariyach cheiyattum, nanri